லட்டு

தேவையான பொருட்கள்

கடலை மாவு - கால் கிலோ
ஜீனி - அரை கிலோ
நெய் - மூன்று தேக்கரண்டி
முந்திரி பருப்பு - ஐம்பது கிராம்
ஏலக்காய் - பத்து
கிஸ்மிஸ் - இருபது
மஞ்சள் வண்ணப் பொடி - ஒரு சிட்டிகை
ரீபைண்டு ஆயில் - அரை லிட்டர்

கடலை மாவினை சலித்து எடுத்துக் கொள்ளவும். கடலை மாவு நாள்பட்டதாக இருந்தால் சுவை நன்றாக இருக்காது. புதிய மாவாக எடுத்துக் கொள்ளவும்.
தேவையான இதரப் பொருட்களைத் தயாராய் எடுத்து வைக்கவும். முந்திரியை சிறு துண்டுகளாகிக் கொள்ளவும். மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றவிட்டும் உடைத்துக் கொள்ளலாம். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும்.
ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் ஜீனியைக் கொட்டி, ஒரு டம்ளர் நீர் விட்டு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்ச வேண்டும். இளம் கம்பி பதம் என்பது கரண்டியில் எடுத்து விரலால் தொட்டு மூன்று வினாடிகள் கழித்து விரலைப் பிரித்தால் மெல்லிய கம்பி இழை போல் வரும்.
குறிப்பிட்ட பதத்திற்கு பாகு தயாரானதும், அந்தப் பாகிலேயே கலர் பவுடர் மற்றும் ஏலப்பொடி சேர்க்கவும்.
கடலை மாவில் போதுமான நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவுக்கரைசலில் நீர் அதிகம் இருந்தால் பூந்தி உருண்டையாக வராது. மீண்டும் சிறிது கடலை மாவு சேர்த்தால் சரியாகி விடும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பூந்தி கரண்டியை வாணலியில் நேரடியாக, பிடித்து பரவலாக கரைத்த மாவை ஊற்றவும். பூந்தி கரண்டி இல்லையென்றால் சாதாரண கண் கரண்டியைப் பயன்படுத்தியும் செய்யலாம்.
பூந்தியை சிறிது நேரம் வேக விடவும். முறுகி விடக் கூடாது.
பதமாக வெந்ததும், பூந்தியை சாரணி கொண்டு அரித்து எடுத்து, ஜீனிப் பாகில் உடனே கொட்டவும். இப்படியே மாவு முழுவதையும் பூந்தியாக பொரித்து பாகில் போடவும்.
பின்னர் உடைத்த முந்திரி, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்து பூந்தியில் கொட்டவும். ஒரு ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்து அதில் கலவையை பரப்பி கரண்டியால் நன்றாக கலக்கவும்.
கை பொறுக்கும் சூடு வந்தவுடன் லட்டுகளாக பிடிக்கவும். மிகவும் ஆறிவிட்டால் உருண்டைப் பிடிப்பது கடினம். மிதமான சூட்டிலேயே பிடித்துவிடவும்.

ஜாங்கிரி

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு - கால் கிலோ
பச்சை அரிசி - ஒரு பிடி
சீனி - அரை கிலோ
ஆரஞ்சு பவுடர் - சிறிது
ரோஸ் எஸன்ஸ் - இரண்டு சொட்டு
ரீபைன்டு ஆயில் - அரை லிட்டர்
கனமான துணி - ஒரு சதுர அடி

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்துக் கொள்ளவும்.
ஜாங்கிரி பிழிவதற்கு சற்று கனமான, ஒரு சதுர அடி அளவுள்ள துணியை எடுத்துக் கொள்ளவும். துணியை நான்காக மடித்து நடுவில் சிறிய துளை இட வேன்டும். டெய்லரிடம் ஜாங்கிரி ரெட்டு என்று சொன்னால் தைத்து தருவார்கள்.
முதலில் உளுத்தம் பருப்பையும், பச்சை அரிசியையும் சேர்த்து பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.
ஊறிய பருப்பையும், அரிசியையும் ஒன்றாய் சேர்த்து கிரைண்டரில் இட்டு, தண்ணீர் அதிகம் விடாமல் சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் கலர் பவுடரைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
மாவு அரைக்கும் போதே சீனியுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு இளம் கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி அதனுடன் ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.
அரைத்த மாவினை துணியின் மையத்தில் வைத்து, அதை குவித்து பிடித்து, அழுத்தினால் ஓட்டையின் வழியாக மாவு வருமாறு செய்து கொள்ளவும்.
இப்போது வாயகன்ற அடி தட்டையான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி சூடாக்கவும். சூடானதும் துணியில் உள்ள மாவை ஜாங்கிரிகளாகப் பிழிந்து வேகவிடவும். சட்டியின் அகலத்தைப் பொறுத்து ஒரு முறைக்கு மூன்று நான்காகப் பிழிந்து விடலாம்.
ஜாங்கிரி ஒரு புறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேக விடவும். அதிகம் வெந்தால் முறுகி விடும். பதமாக வேக வைக்கவேண்டும்.
இரண்டு புறமும் பதமாக வெந்தவுடன் ஒரு சாரணி கொண்டு, எண்ணெய் வடித்து எடுத்து சீனிப் பாகில் போடவும்.
பாகில் சற்று நேரம் ஊறியதும் எடுத்து தட்டில் அடுக்கவும். இப்போது சுவையான, சூடான ஜாங்கிரி தயார். ஜாங்கிரி பிழிவதற்கு சற்று அனுபவம் தேவை. முதலில் துணியில் மாவை எடுத்து ஒரு வாழை இலையில் இரண்டு செ.மீ. விட்டத்திற்கு வட்டம் போட்டு அதன் மேல் சிறிய சிறிய வட்டங்களாக (கடையில் இருப்பதை போல) பிழிய வேண்டும். பல முறை செய்தவுடன் கை பழகி விடும். பிறகு எண்ணையில் நேரடியாக பிழிய வேண்டும்.

எச்சரிக்கை: ஜாங்கிரி பிழிய ஆரம்பிக்கும் முன் கையில் வளையல், பிரேஸ்லெட்டை கழற்றி விடவும். நேரடியாக எண்ணையில் பிழியும்போது அவை சூடாகி கையில் மாறாத தழும்புகளாகி விடும்.

இறால் வறுவல்

தேவையான பொருட்கள்

இறால் - அரை கிலோ
பெ. வெங்காயம் - அரை கிலோ
மஞ்சள் பொடி - ஒரு டீஸ்பூன்
மி. பொடி - இரண்டு டீஸ்பூன்
இஞ்சி + பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
ரீபைன்டு ஆயில் - மூன்று டேபிள்ஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்

செய்முறை
முதலில் இறாலை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, இஞ்சி+ பூண்டு விழுது, உப்பு தடவி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு அடுப்பில் நான்ஸ்டிக் வாணலியை வைத்து எண்ணையை ஊற்றி சோம்பு தாளித்து ஊற வைத்த இறாலை போட்டு வதக்க வேண்டும்.
அதுவே தானாக நீர்விட்டுக்கொள்ளும். எனவே நீர் ஊற்ற வேண்டாம்.
நீர் முழுவதும் வ்ற்றியதும் வெங்காயத்தை நீள நீளமாக அரிந்து இறாலில் போடவும்.
சிம்மில் வைத்து பத்து நிமிடங்கள் வதக்கவும். கடைசியாக கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.


பரிமாறும் அளவு - ஐந்து நபர்களுக்கு
ஆயத்த நேரம் - இருபது நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - இருபது நிமிடங்கள்

நண்டு குருமா

தேவையான பொருட்கள்

நண்டு - ஒரு கிலோ
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
இஞ்சி & பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணை - இரண்டரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்
அரைக்க:
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
சீரகம் - ஒரு டீ ஸ்பூன்
மிளகு - ஒரு டீ ஸ்பூன்
மிளகாய் பொடி - ஒரு டீ ஸ்பூன்
மல்லி பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் - ஐந்து டேபிள் ஸ்பூன்

செய்முறை
முதலில் நண்டை சுத்தம் செய்து இரண்டு துண்டுகளாக நடுவில் நறுக்கவும்.
அடுப்பில் வானலியை வைத்து அரை டேபிள் ஸ்பூன் எண்ணை ஊற்றி அரைக்க வைத்துள்ளவற்றில் மிளகு, சீரகம், சோம்பு போட்டு வாசம் வர வறுத்து அடுப்பை சிம்மில் வைத்து பின் மல்லி பொடி, மிளகாய் பொடி சேர்த்து பிரட்டவும்.
தேங்காயை கடைசியாக போட்டு லேசாக வெதுப்பினால் போதும்.
இறக்கி ஆற வைத்து விழுதாக அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணை ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி & பூண்டு விழுது சேர்க்கவும்.
வாசனை வந்ததும் தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து வதங்கியதும் நண்டைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின் அரைத்த விழுதை ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

பரிமாறும் அளவு - நான்கு நபர்களுக்கு
ஆயத்த நேரம் - பதினைந்து நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - இருபது நிமிடங்கள்

இறால் குழம்பு

தேவையான பொருட்கள்

இறால் - அரை கிலோ
சி. வெங்காயம் - ஐம்பது கிராம்
பூண்டு - மூன்று பல்
தக்காளி - மூன்று
மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
உப்பு -ஒன்றரை டேபிள் ஸ்பூன்
எண்ணை - மூன்று டேபிள் ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - மூன்று கொத்து
தேங்காய்த் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன்
சீரகம் - கால் டீ ஸ்பூன்

செய்முறை
இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்கவும்.
வெங்காயத்தை இரண்டிரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கவும்.
தேங்காய் & சீரகத்தை அரைக்கவும்.
சோம்பை நன்றாக தட்டி வைக்கவும்.
புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி சோம்பு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி இறாலை சேர்க்கவும்.
இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி புளியை ஊற்றவும்.
ஐந்து நிமிடம் கழித்து தேங்காய் ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

பரிமாறும் அளவு - ஆறு நபர்களுக்கு
ஆயத்த நேரம் - இருபது நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - இருபது நிமிடங்கள்

நெய்மீன் வறுவல்

தேவையான பொருட்கள்

நெய்மீன் - அரை கிலோ
மிளகாய் பொடி - இரண்டு டேபிள் ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
பூண்டு - இரண்டு பல்
சி. வெங்காயம் - ஒன்று
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - முன்று கொத்து
எண்ணை - வறுக்க தேவையான அளவு

செய்முறை

முதலில் மீனை சுத்தம் செய்து அகலமான மெல்லிய துண்டங்களாக நறுக்கி வைக்கவும்.
மி.பொடி, ம.பொடி, உப்பு, சோம்பு, சி.வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
அரைத்த விழுதைப் போட்டு மீன் துண்டங்களில் பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலையை பரவலாகப் போட்டு அதன் மேலேயே மீன் துண்டங்களைப் பரப்பவும்.
இரண்டு பக்கமும் நன்கு சிவந்ததும் வெளியில் எடுத்து எண்ணை உறிஞ்சும் தாளில் சுற்றி தட்டில் எடுத்து வைக்கவும்.


பரிமாறும் அளவு - நான்கு நபர்களுக்கு
ஆயத்த நேரம் - பத்து நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - பத்து நிமிடங்கள்

வஞ்சிர மீன் குழம்பு

தேவையான பொருட்கள்

வஞ்சிர மீன் - முக்கால் கிலோ
சி. வெங்காயம் - ஐம்பது கிராம்
தக்காளி - இரண்டு
ப. மிளகாய் - ஐந்து
புளி - பெரிய எலுமிச்சையளவு
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
சீரகம் - கால் டீ ஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
எண்ணை - நான்கு டேபிள் ஸ்பூன்
உப்பு – இரண்டு டீ ஸ்பூன்
அரைக்க:
வர மிளகாய் - ஏழு
மல்லி விதை - ஒரு டேபிள் ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்

செய்முறை

முதலில் மீனை சுத்தம் செய்து சிறிய துண்டங்களாக நறுக்கி உப்பு போட்டு பிசறி நன்கு கழுவி வைக்கவும்.
வர மிளகாய், மல்லி, சோம்பு மூன்றையும் பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நைஸான விழுதாக அரைத்து வைக்கவும்.
வெங்காயத்தில் இரண்டை எடுத்து வைத்து விட்டு மற்றதை தோலுறித்து இரண்டாகவும், தக்காளிகளை நான்காகவும் நறுக்கவும்.
ப. மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். தனியாக பிளக்க வேண்டாம்.
புளியை மூன்று டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அரைத்த விழுதையும் போட்டு கரைத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து வெந்தயம் போட்டு வாசனை வந்ததும் வெங்காயம், ப. மிளகாய், கறிவேப்பிலை போட்டு மூன்று நிமிடம் வதக்கவும்.
பின் தக்காளி, ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும்.
இப்போது புளிக் கரைசலை ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
பின் மீன் துண்டங்களைப் போட்டு (மீனை போட்டவுடன் குழம்பு லேசாக நீர்த்துக் கொள்ளும்) ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
சீரகத்தை நன்றாகத் தட்டி பிறகு இரண்டு வெங்காயத்தையும் வைத்து லேசாகத் தட்டி குழம்பில் போட்டு மூடி பத்து நிமிடம் கழித்து திறந்து லேசாக (மீன் உடைந்து விடாமல் கவனமாக) கிண்டி விடவும்.

பரிமாறும் அளவு - ஐந்து நபர்களுக்கு
ஆயத்த நேரம் - பத்து நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - முப்பது நிமிடங்கள்